வரலாற்றின் வழி
நிற்கும் பல்லாயிரக்கணக்கான சுவடுகள் அறியாத வயதில், நான் படித்தவற்றை கதையாக எண்ணி
கடந்து வந்தவை எல்லாம் ,கண் முன்னே காட்சியாக விரியும் போது ஒன்று நமது பழைய எண்ணத்தின்
நினைவுகள் மீது வெட்கம் கொள்ளலாம்..இல்லையென்றால் கதையாக எண்ணி கடந்தவற்றை காலம் நம்மை அவ்விடத்திற்கு இழுத்து வந்து சான்றை கண்
முன்னே நிறுத்துகிறதெ என்று பெருவியப்பு அடையலாம்.
சிவபெருமானை வழிபட்டு
,பாடி ,கொண்டாடி மகிழ்ந்தவர்கள் நாயன்மார்கள் எனப்பட்டனர்.அவர்களுள் முன்னோடியாக மூவரை
சொல்வர். தேவாரம் என்று அவர்களுடைய பாடல்கள் தொகுக்கப்பட்ட்தால் அவர்களை தேவார மூவர்
என்றும் அழைப்பர்.அவர்களுள் மூத்தவர் திரு நாவுக்கரசர் என்ற பெயர் கொண்ட அப்பர்.
அப்பர் அடிகளின்
வாழ்க்கை வரலாற்றில் அவர் சிவனடியாராக மாறுவதற்கு முன்பு மருள்நீக்கியார் என்ற பெயரில்
சமண சமயத்தை சார்ந்தவராக இருந்ததும் பின் அவருடைய சூலை நோய் தீர அவர் தமக்கையின் சொற்படி
சைவ சமயத்தை தழுவியதும் அதன் பின் சிவபெருமான் மீது பாடல் புனைந்து நாவுக்கரசர் என
பெயர் பெற்றதும் அவர் வாழ்வின் தொடர் நிகழ்வு.
அப்பருடைய காலத்தில்
சமண சமயத்தில் தீவிரமாக இருந்த மன்னன் அப்பரின் இந்த செயலைக்கண்டு பொறுக்காது அவரை
சுண்ணாம்பு சூளையில் இட்டதும்,கடலில் எறிந்ததும் அவர் பாடல்களின் வாயிலாகவே அறியலாம்.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
இப்படியெல்லாம்
இம்சித்த அரசரை சிறிது காலம் கடந்து சைவ சமயத்திற்கு மருள்நீக்கியாராக இருந்த அப்பராக
மாறிய திருநாவுக்கரசர் மாற்றுகிறார்.
சைவத்தின் வழிபாட்டுக்கு
மாறிய அரசர் தான் முன்பு கட்டிய சமண கோவில்கள் சிலவற்றை இடித்து சைவ கோவிலாக மாற்றுகிறார்.இவையெல்லாம்
படித்து கதைகளாக கடந்தவை.
வரலாற்றில் பல்லவ
சக்ர்வர்த்தியாக மகேந்திரவர்மர் என்பவர் இருந்தார் ஆனால் அவர் தமிழ் நாடெங்கும் குடைவரை
கோவில்களை எடுப்பித்தவர் என்றோ அதை நாம் இன்றும் காணமுடியும் என்றெல்லாம் எனது இருபது
வய்தில் கூறியிருந்தால் சொன்னவரின் புத்தி சுவாதீனத்தை சந்தேகித்திருப்பேன்.
இன்று வரலாற்றை
அதன் தடத்தை கண்முன்னே காணும் போது பல இடத்தில் பேச்சே எழவில்லை.அப்படித்தான் திருவதிகை
சென்றதும் பெரிய கோவில் சென்று வந்த பின் வேறு எதுவும் கோவில் இருக்கிறதா என்ற வினாவில்
கிடைத்தது இது..அந்த கோவிலுக்கு சென்று அந்த ஈசனின் பெயரை கண்டவுடனேயே வரலாறு கதையை
காட்சிகளாக்கி அதன் புதிரை கண் முன்னே புரிய வைக்க ஆரம்பித்தது.
நீலாயதாட்சி சமேத
குணபரேஸ்வரர். பல்லவ மன்னரின் பட்டப்பெயர்களுள் ஒன்று குணபரன்.மகேந்திரவர்மர் சமணத்திலிருந்து
சைவத்திற்கு மாறி சமண கோவிலை சிவன் கோவிலாக மாற்றிய கோவிலாக இருக்கலாம்.கோவிலில் இருக்கும்
பல்லவ கால கலையை நினைவூட்டும் ஈசனும் , ஈசனின் வலது புறம் அருளாசி வழங்கும் அதன் பின்னான
பல்லவர் காலத்தை சேர்ந்த திருமாலும் அப்பரின் வரலாற்றை கண் முன்னே காட்சிப்படுத்துகிறார்கள்.
அப்பர் பிறந்த திருவாமூர் திருவதிகையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
ஆயிரத்து முன்னூறு
வருடங்கள் கடந்த வரலாற்றை கதையாக எண்ணிய என்னை போன்ற அறிவிலிக்கு காலம் காட்சிகளோடு
சாட்சிப்படுத்தும் விந்தையை என்ன சொல்வது !